முட்டைக்கன்னிகளும் பின்னே அவனும் (பகுதி 2)


                                           மு.க.பி.அ (பகுதி 1)




பத்தாம் வகுப்பு படிக்கிறவுனுக்கெல்லாம் காதல் வருமா , அதெல்லாம் தேவையா என்பதையெல்லாம் யோசித்து புரிந்துகொள்கிற அறிவு அப்பொழுது எங்களுக்கில்லை. பிரவீன் அது காதல் என்று உறுதியாய் நம்பினான். நான் அவனை நம்பினேன். வசுந்துராவின் கர்ச்சீப்பை தவிர எல்லாம் கடன் வாங்கியாகிவிட்டது.பெருசாய் சொல்லிக்கொள்ளும்படி முன்னேற்றமில்லை. பத்தாவுது பப்ளிக் பரீட்சை என்று அரசாங்கம் கவலைப்பட்டாலும் பிரவீன் கவலைப்படுவதாயில்லை. பிரவீன் இந்த காலங்களில் என்னைத்தவிர்க்க ஆரம்பித்தான். இந்த பெரியவுனுங்களே இப்படித்தான் நேரம் பார்த்து சிறியவர்களை சுழற்றிவிட்டுடுவானுங்க. இந்தக்காலத்தில் எனக்கு சின்னம்மை வந்து படுத்த படுக்கையாய் வீட்டில் இருந்தேன். இளநீர், டொரினோ, பத்து நாட்கள் விடுமுறை, டீவியில் கிரிக்கெட் போட்டிகள் என "சின்னம்மை" பத்து நாட்கள் என்னை சந்தோசமாய் வைத்துக்கொண்டாள்.

எல்லாம் முடிந்து டியூசன் போனேன். பிரவீனையும் காணலை முட்டைக்கன்னியையும் காணலை. செட் ஆகி ஓடிட்டாய்ங்களோ என அதிர்ந்தேன். விசாரித்ததில் அதை விட பெரிய அதிர்ச்சி கிடைத்தது. பிரவீன், வசுந்தராவுக்கு லெட்டர் கொடுத்துவிட்டதாகவும், அவள் அழுது ஊரைக்கூட்டியதாகவும் சொன்னார்கள். பிற்பாடு அவளின் அப்பாவும், டியூசன் வாத்தியாரும் சேர்ந்து பிரவீனை வெளுத்து வாங்கியிருக்கிறார்கள்.வீட்டிலும் அவனுக்கு தர்மடி விழுந்ததாக சொன்னார்கள்.அவனை பார்க்க வேண்டும் போல இருந்தது. அவன் வீட்டுக்குக்கிளம்பினேன்.வழக்கம்போல அவன் ரூம் ஜன்னலில் கல்லை விட்டெறிந்தேன். மாடிக்கு வந்தான். முகம் வீங்கியிருந்தது. கண்ணெல்லாம் சிவந்து காணப்பட்டது. என்னைப் பார்த்து கண் கலங்கினான். ஆறுதல் சொல்வதெல்லாம் என்னுடைய ஏழாவது சிலபஸ்ஸில் இல்லை என்பதால் முழித்துக்கொண்டு நின்றேன். பிரவீன் அப்படி நிற்பதை பார்க்க ரொம்ப கஷ்டமாய் இருந்தது. என்னை நிமிர்ந்து பார்த்து "வீட்ல அப்பா என்கூட பேசவே மாட்டேன்னு சொல்லிட்டாரு. வெளியவே போக முடில சிவா..ரொம்ப அசிங்கமா இருக்கு."

" விடு பிரவீன். எல்லாம் சரியாகிடும். நாளைக்கு ஓடப்பட்டிக்காரய்ங்க கூட மாட்ச். அந்த தொண்ணக்கையன் பாலை வெளுத்துக்கட்டுவோம். எல்லாத்தையும் மறந்திட்டு பழைய மாதிரி இருப்போம்."

பிரவீன் பேசாமல் குனிந்திருந்தான். நிமிர்ந்து என்னைப் பார்த்து "ஒனக்கு ஒன்னு தெரியுமா..அந்த லெட்டரை நான் ரத்தத்தில எழுதினேன்". அவனவே அதிர்ந்து பார்த்தேன்.கையில் பேண்டேஜ். உலகத்திலேயே ரத்தத்தில் எழுதிய ஒரு காதல் கடிதத்திற்கு இந்தளவு அவமதிப்பு நடந்திருக்காது. கொஞ்ச நேரம் அமைதியாய் நின்று கொண்டிருந்தோம்.அழுதான்.குலுங்கி குலுங்கி அழுதான். அந்தக்காட்சியை என்னால் இன்னும் நினைவு கொள்ள முடிகிறது.




காலம் ஒரு விசித்திர சக்கரம். சங்கடங்கள் எல்லாத்தையும் மறக்கும் சம்பவங்கள் வந்துகொண்டே இருக்கும். பிரவீன் பழைய நிலைக்கு சில மாதங்களில் வந்து விட்டான். கிரிக்கெட்டுக்கு அதில் முக்கிய பங்குண்டு. இறுதி போட்டி ஒன்றில் பிரவீன் புல் ஷார்ட்டில் அடித்த சிக்சர், எங்கள் ஊர் இளவட்டங்கள் மத்தியில் பிரபலம் ஆனது. " அப்பிடியே அஜய் ஜடேஜா மாதிரி விளையாடுரான்ப்பா "  என அந்நாட்களில் அவனை சொல்வார்கள். நிறையமுறை எனக்கு டிரைவ் ஆடுவது எப்படி என சொல்லித்தந்திருக்கிறான். சுமாராய் படித்து பத்து, பன்னெண்டுகளை முடித்து இஞ்ஜினியரிங் சேர்ந்தான். இந்த நாட்களில் அவன் வசுந்தராவை பற்றியோ மற்ற பெண்களை பற்றியோ பேசியதில்லை. நான் கூட அவனை கேலியாய் " என்னடா முட்டைக்கண்ணிட்ட போய் திரும்பவும் ஜாமிட்ரி நோட் வாங்குவோமா.." என்பேன். லேசாய் சிரிப்பான்.

பிரவீன் இன்ஜினியரிங் படிக்க ஊரை விட்டு போனதுக்கப்புறம் என்னுடைய வாழ்க்கை மணிரத்னம் படம் போல் மிகவும் மெதுவாய் போனது. என்னுடைய வயது நண்பர்கள், படிப்பு என மெல்லமாய் ட்ராக் மாறினேன். பத்தாவுது ரிசல்ட் வந்தவுடன் பிரவீன் போன் செய்தான்.

"டேய்..கம்ப்யூட்டர் சயின்ஸ் எடு...ஒனக்கு பயலாஜி செட் ஆகாது..தவிர நீயெல்லாம் டாக்டர் ஆனா நாடு தாங்காது"

"போடா வென்று...அரியர் வச்சத பாஸ் பண்ணு.அப்புறம் ஒன்னோட நகைச்சுவைய இங்க தெளி.."

இப்படியாக போனுக்குள் எங்கள் நட்பு சுருங்கிப்போனது. நானும் ஸ்கூல்களை கடந்து கல்லூரி போனேன். ஊருடைய தொடர்பு குறைந்து போனது. தீபாவளி,பொங்கல்களின் போது தான் பிரவீனை நேரில் பார்க்க முடிந்தது. செல்போன் வாங்கியிருந்தான். தனக்கு எதோ நம்பரில் இருந்து அடிக்கடி கால் வருவதாகவும் ,எடுத்தால் பேசாமல் சிரிப்பு சத்தம் கேட்பதாகவும் சொன்னான். நான் வேறொரு மொபைலில் இருந்து அந்த எண்ணுக்கு கூப்பிட்டேன்.
ஒரு பெண் எடுத்தாள். சுதாரித்தேன். பிரவீன் தம்மை பத்த வைத்து என்னையே பார்த்துக்கொண்டு இருந்தான்.(புகை பிடிப்பது உடலுக்கு கேடு )

" மேடம்"

" ஹா..ச்சொல்லுங்க யார் பேசுறது?"

" பேச்சு நல்லா வருதே மேடம். சிலருக்கு நீங்க கால் பண்ணி பேசாம சிரிக்க மட்டும் செய்றீங்களாமே..?"

கட் செய்தாள். பிரவீன் சிரித்தான். அவன் இன்னமும் பெண்கள் கூட இயல்பாய் பேசுவது கிடையாது. அவனுக்கு அந்த மொபைல் மோகினி மீது ஆர்வமேதும் இல்லை.நான் விடுவதாய் இல்லை. திரும்பவும் அந்த நம்பருக்கு அழைத்தேன்.

" ஹலோ.அவ்ளோ பயமிருக்குல...இன்னொரு தடவ கால் பண்ணுன.."

" நீ அந்த கூட சுத்துற அரைடிக்கெட் தான... என்ன நாக்கு நீளுது.."

"  ஹே..பாத்து பேசு ...தைரியமிருந்தா..."

" நிப்பாட்டு...ஹரிணி தான் கூப்பிட்டேன்னு உங்க வீராதிவீரர்ட்ட சொல்லு.."

இந்த முறை நான் கட் செய்து விட்டேன். நெஞ்சு பட படவென அடித்தது. பிரவீனை பார்த்தேன். அவன் என்ன என்பது போல புருவத்தை உயர்த்தி என்னை பார்த்தான். "டேய் ..யாருடா ஹரிணி". கொஞ்சம் யோசித்தான்.

"  பிரகாஷ் மாமா பொண்ணுன்னு நினைக்கிறேன்.."







"  பேண்ட் போட்டுட்டு உங்க வீட்டுக்கு வருவாளே அந்த குண்டாச்சட்டியா??"

" ம்..ம் "

விதி இந்த முறை வீட்டுக்குள்ளிருந்தே ஆள் பிடித்திருந்தது. அவளுக்கும் துறுதுறுவென,மிகக்கூர்மையாய்,மிகப்பெரியதாய்,முட்டை வடிவிலான கண்கள் துருத்திக்கொண்டு இருந்தது.

                                                                                                          ---- தொடரும் 
   

கருத்துகள்

பெயரில்லா இவ்வாறு கூறியுள்ளார்…
Interesting Sivaraj!
Muttaikal koodikitte irrukku!
Anyway so nice to read.
I am waiting for next part
இவன் சிவன் இவ்வாறு கூறியுள்ளார்…
Nandri.